தேர்தல் திருவிழாவிற்கு தமிழகம் தயாராகி வரும் வேளையில், கூட்டணிக் கணக்குகளும் தொகுதிப் பங்கீடுகளும் இறுதியாக உறுதி செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 16 தொகுதிகள் மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தனித் தொகுதிகள் முதல் தென் மாவட்டங்களான கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வரை காங்கிரஸின் கோட்டை எனக் கருதப்படும் இடங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், சென்னை பெருநகரில் வேளச்சேரி தொகுதியுடன் கூடுதலாக எழும்பூர், தி.நகர் ஆகிய தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, உதகமண்டலம், ஈரோடு கிழக்கு மற்றும் காரைக்குடி போன்ற முக்கிய நகரப் பகுதிகளிலும் காங்கிரஸ் மீண்டும் தனது பலத்தை நிரூபிக்கக் களம் இறங்குகிறது.
உறுதியான தொகுதிகள்:
பொன்னேரி (தனி)
சோளிங்கர்
ஸ்ரீவைகுண்டம்
சிவகாசி
நாங்குநேரி
மயிலாடுதுறை
உதகமண்டலம்
ஈரோடு கிழக்கு
காரைக்குடி
வேளச்சேரி
ஸ்ரீபெரும்புதூர் (தனி)
கிள்ளியூர்
விளவங்கோடு
குளச்சல்
அறந்தாங்கி
திருவாடனை
உத்தேசம் :
எழும்பூர்
திநகர்
மதுராந்தகம்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று, நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. தென்காசி, விருத்தாச்சலம் தவிர 16 தொகுதிகளை மீண்டும் நாங்கள் திரும்ப பெற்று இருக்கிறோம். தோழமை கட்சிகள் கேட்டு கொண்ட காரணத்தினால் கூட்டணி கட்சிகள் சிலபேரை நிறுத்தும் காரணத்தால், இரண்டு தொகுதிகளை அவர்களால் கொடுக்க இயலவில்லை. அதற்கான காரணங்களை நாம் ஒப்புக்கொண்டு இருக்கிறோம். ஈரோடு ஏற்கனவே நாங்கள் நின்ற தொகுதி.
அதனை மீண்டும் நாங்க பெற்று இருக்கிறோம். எங்களுக்கு 28 தொகுதிகளில் 23 இடங்களை அடையாளம் கண்டு இருக்கிறோம். ஐந்து தொகுதிகள் மீண்டும் அமர்ந்து பேசி, முடிவு எடுக்க உள்ளோம். கன்னியாகுமரியில் நாங்கள் மூன்று இடங்களில் போட்டியிடுகிறோம். அதில் ஒன்றை தற்போது கேட்டு இருக்கிறார்கள். இதுப்பற்றி எங்களில் அகில இந்திய தலைமையிடம் பேசி முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அது சிட்டிங் எம்எல்ஏக்கள் இருக்கும் தொகுதி. அதனால் அந்த இடத்தை விட்டு கொடுப்பது கடினம். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எங்கள் வேட்பாளருக்கு ஒரு பிரச்சனை உள்ளது. அதுப்பற்றி முதல்வரிடம் பேசி முடிவெடுப்போம் என்றார்.
மேலும், காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்டு வென்ற 16 தொகுதிகளை மீண்டும் கேட்டு பெற்றுள்ளனர். அதே நேரம் தென்காசி, விருத்தாச்சலம் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்காக விட்டு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியில் திமுகவே களமிறங்க உள்ளது. இதனிடையில் கடந்த முறை வெற்றி பெற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியும் திமுக விட்டு தருமாறு கேட்டுள்ளது. இதனையடுத்து தற்போது வரை 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
