அண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் பாலியல் சம்பவம் நடந்துள்ளது பற்றி ஒரு இளம்பெண் புகார் கொடுத்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், ‘தனது பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக’ புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 26ஆம் தேதியான நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில், “பேராசிரியர் ஞானவேல் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாகவும்” குறிப்பிட்டுள்ள மாணவி, “இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று அவர் மிரட்டுவதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், “தனக்கு மட்டுமின்றி தனது தோழிகளுக்கும் இதேபோன்ற குறுஞ்செய்திகளை அந்த பேராசிரியர் அனுப்பியதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி அழைத்து தொந்தரவு செய்ததாகவும், தான் தனது நண்பர்களுடன் பேசுவதை அவர் தவறாக பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக POSH கமிட்டியிடமும் தான் புகார் அளித்திருப்பதாகவும், விரைந்து விசாரணை நடத்தி அந்த பேராசிரியர் ஞானவேல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் மாணவி கூறியுள்ளார்.
மாணவி கொடுத்த புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அபிராமபுரம் மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்டமாக, மாணவியின் செல்போன் கைப்பற்றப்பட்டு அப்பேராசிரியர் அனுப்பியதாக கூறப்படும் குறுஞ்செய்திகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பேராசிரியர் ஞானவேலுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தனது X பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “சுமார் இரண்டு ஆண்டுகளாக, பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக, மாணவி புகார் கூறியிருக்கிறார். மேலும் பல மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாதுகாப்பான முறையில், அவரது பாடப்பிரிவு மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு, தமிழக காவல்துறைக்கு உள்ளது.
கடந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போது, உயர்கல்வித்துறை அமைச்சர், அனைத்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார். ஆனால், அதே காலகட்டத்தில், மேலும் பல மாணவிகள், பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள, ‘பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் புகார் விசாரணைக் குழு’ (PoSH) உண்மையில் செயல்பாட்டில் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கோவி.செழியன் பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து பேராசிரியர் ஞானவேல் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது பேராசிரியர் ஞானவேல் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி ஞானசேகரன் என்பவனால் பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரமே பெரிய வடுவாக இருக்கும் நிலையில், உள்ளிருக்கும் பேராசிரியராலேயே மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகி இருப்பது தமிழ்நாட்டை மீண்டும் ஒருமுறை உலுக்கியிருக்கிறது.
