மத்தியில் ஆளும் பாஜக அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருவதாக காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் இன்று உரையாற்றிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, மோடி அரசு நாட்டின் மூலோபாய மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை முற்றிலும் சீர்குலைத்துவிட்டது; சாதாரணக் குடிமக்கள் நிவாரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், பாஜக தலைமை இந்த நெருக்கடியான சூழலிலும் “பொதுமக்களைச் சுரண்டுவதிலும், நாட்டைக் கொள்ளையடிப்பதிலும்” மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
‘X’ தளத்தில் பதிவிட்ட கார்கே, மோடி அரசு நாட்டின் மூலோபாய மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை முற்றிலுமாக “அழித்துவிட்டது” என்று குற்றம் சாட்டிய அவர், அதன் நேரடி பாதிப்பை 140 கோடி இந்தியர்கள் அனுபவித்து வருவதாகத் தெரிவித்தார். இன்று (ஏப்ரல் 1) புதிய நிதியாண்டு தொடங்குவதை ஒட்டி, இன்று முதல், அன்றாடத் தேவைக்கான பல முக்கியப் பொருட்களின் விலைகள் உயரவுள்ளன. இது சாமானிய மக்களின் குடும்ப பட்ஜெட்டை கடுமையாகப் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வணிக ரீதியிலான LPG சிலிண்டர்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அவற்றின் விநியோகம் அதலபாதாளத்தை எட்டியுள்ளது. சாலையோர உணவகங்களில் விற்கப்படும் தேநீரின் விலை உயர்வு முதல், மதிய உணவுத் திட்டத்தின் மீதான கடுமையான எதிர்மறைத் தாக்கம் வரை இதன் விளைவுகள் நீள்கின்றன. விமானங்களுக்கான எரிபொருளான ATF-இன் விலையும் உயர்ந்துள்ளது.
ஒரு காலத்தில் சாமானிய மக்களுக்கும் எளிய முறையில் சாத்தியமாக இருந்த விமானப் பயணம், தற்போது எட்டாத கனவாக மாறிவிட்டது; அரசு அதன் விலை வரம்பைக் கூட நீக்கிவிட்டது.
“900-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்ந்துள்ளன; சுகாதாரச் செலவுகள் மேலும் அதிகரித்துள்ளன; இதய ரத்தக்குழாய் ஸ்டெண்டுகளின் விலையும் உயர்ந்துள்ளது; நீங்கள் இனி அதிக சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்; ‘நெடுஞ்சாலைக் கொள்ளை’ முழுவீச்சில் நடைபெற்று வருகிறது; விரைவு அஞ்சல் கட்டணங்களும் 34 சதவீதம் உயர்ந்துள்ளன; நெகிழிப் பொருட்கள், எஃகு மற்றும் பீங்கான் பொருட்களின் மீது கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது; விவசாயிகளுக்கான PVC குழாய்களின் விலையும் உயர்ந்துள்ளது; தார் (Bitumen) விலையானது 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது; கட்டுமானத் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது,” என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.
“சாதாரணக் குடிமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) ஆகியவை நிவாரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இத்தருணத்தில், பாஜக தலைமை அவர்களின் அவலநிலையை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இந்தக் நெருக்கடிக்கு மத்தியிலும் பொதுமக்களைச் சுரண்டுவதிலும் நாட்டைக் கொள்ளையடிப்பதிலும் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறது,” என்று கார்கே கூறினார்.
இந்த விலை உயர்வு குறித்து, ‘பாஜக கொள்ளை நாள்’ (BJP Loot Diwas) என்ற தலைப்பிட்ட ஒரு காணொளித் தொகுப்பை அவர் பகிர்ந்துகொண்டார்.
