பிரதமர் நரேந்திர மோடி, நாளையும், நாளை மறுநாளும் என இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 3.20 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தடையும் அவர், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பின் மாலை 6 மணியளவில் சென்னை திரும்பும் பிரதமர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார்.
இரவில் ஹோட்டலில் வைத்து பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி, சென்னையில் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பிரதமர் செல்லும் வழித்தடங்களில் 10 அடிக்கு ஒரு போலீஸ் வீதம் பாதுகாப்புக்காக நிறுத்தப்படவுள்ளனர். அத்தோடு கிண்டி, மற்றும் மீனம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பகுதிகளிலும் ட்ரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
