தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
திமுகவின் அறிவு முகமாக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மதுரை மத்திய தொகுதியில் வீழ்த்துவது சாதாரண காரியமல்ல என்பதை உணர்ந்த ஏ.சி. சண்முகம், அவர் சார்ந்த அதே பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சினிமா பிரபலம் சுந்தர் சி-யை களமிறக்கி உள்ளார். மதுரை மத்தியில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்களின் வாக்குகள் முழுமையாக பிடிஆர் பக்கம் செல்ல விடாமல் தடுக்கவும் சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார். சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக தனது வேட்பாளர்களை அறிவித்தது. அதில், புதிய நீதிக்கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படாதது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பாஜக தரப்பிலிருந்து தங்களுக்கு ஒரு தொகுதி உறுதியாக வழங்கப்படும் என்று புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது பாஜக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் ஏ.சி.சண்முகத்தின் கட்சிக்கு இடம் அளிக்கப்படவில்லை. நீண்டகாலமாக பாஜகவுடன் இணக்கமாகச் செயல்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், கூட்டணியில் உள்ள மற்றொரு அங்கமான தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் திருமாறன் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.சி.சண்முகத்திற்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், சிறிய கட்சியான ஃபார்வர்டு பிளாக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
