காலநிலை மாற்றம் என்பது இனி வெறும் வெப்பநிலை உயர்வு மட்டுமல்ல, அது பூமியின் ஒட்டுமொத்த பல்லுயிர் கட்டமைப்பையும் நேரடியாகச் சிதைக்கத் தொடங்கியுள்ளது. ‘நேச்சர் எகாலஜி & எவல்யூஷன்’ (Nature Ecology & Evolution) இதழில் கடந்த ஏப்ரல் 24 (2026) அன்று வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, புவி வெப்பமடைதல் இதே வேகத்தில் நீடித்தால், 2085-ஆம் ஆண்டிற்குள் நிலப்பரப்பில் வாழும் விலங்குகளின் வாழ்விடங்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமானவை (சுமார் 36%) அதீத காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, அமேசான் படுகை, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் போன்ற பல்லுயிர் பெருக்கம் அதிகம் கொண்ட இடங்களே அதிக ஆபத்தில் உள்ளன. வெப்ப அலைகள், காட்டுத்தீ, வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் மிக வேகமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு நம்பிக்கைக் கீற்றாக, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை உடனடியாகக் குறைத்து ‘நிகர பூஜ்ஜியம்’ (Net Zero) நிலையை அடைந்தால், இந்த பேரழிவுகளில் பெரும்பகுதியைத் தவிர்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியின் போட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஐயுசிஎன் (IUCN) சிவப்புப் பட்டியலின் தரவுகளைக் கொண்டு நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. காலநிலை மாற்றம் என்பது ஏதோ பல ஆண்டுகளில் மெதுவாக உயரும் வெப்பநிலை மட்டுமல்ல, அது திடீரெனத் தாக்கும் தொடர் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரழிவு என்று முதன்மை ஆய்வாளர் ஸ்டெபானி ஹெய்னிக் எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஒரு சீற்றம் முடிந்தவுடன் மற்றொன்று தாக்கும்போது அதன் பாதிப்பு பலமடங்கு அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவில் நிலவிய கடும் வறட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட காட்டுத்தீயால், அங்கிருந்த தாவர மற்றும் விலங்கு இனங்களின் அழிவு விகிதம் 27% முதல் 40% வரை அதிகரித்ததை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
சுமார் 33,936 முதுகெலும்புள்ள உயிரினங்கள் மற்றும் 794 சுற்றுச்சூழல் மண்டலங்களை ஆய்வு செய்ததில், 2050-ஆம் ஆண்டிற்குள் நடுத்தர-உயர் கார்பன் வெளியேற்றச் சூழலில், உலகின் 74% உயிரினங்களின் வாழ்விடங்கள் கடும் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. மேலும், 16% வாழ்விடங்கள் காட்டுத்தீயாலும், 8% வறட்சியாலும், 3% வெள்ளத்தாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். அமேசான் படுகை, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் பல்லுயிர் செறிந்த பகுதிகளிலேயே இந்த ஆபத்துகள் அதிகம் குவிந்துள்ளன. அதாவது, எங்கு அதிகப்படியான உயிரினங்கள் வாழ்கின்றனவோ, அங்குதான் அச்சுறுத்தலும் அதிகமாக உள்ளது.
இந்த ஆய்வின் இறுதி எச்சரிக்கை இன்னும் தீவிரமானது. 2050-ஆம் ஆண்டிற்குள் 22 சுற்றுச்சூழல் மண்டலங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இயற்கைச் சீற்றங்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும். இந்த எண்ணிக்கை 2085-ஆம் ஆண்டிற்குள் 236-ஆக உயரும் அபாயம் உள்ளது. குறிப்பாக 2085-க்குள், விலங்குகள் வாழும் பகுதிகளில் சுமார் 36% இடங்கள் ஒரே நேரத்தில் பலவிதமான அதீத காலநிலை மாற்றங்களால் (வெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம் போன்றவை) சிதைக்கப்படும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. இத்தகைய தொடர் தாக்குதல்கள் பல்லுயிர் சூழலை மீட்டெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளக்கூடும்.
