தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் பரபரப்பாக பரப்புரையில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக கோடைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யோ ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
முருகப் பெருமானின் 2-வது அறுபடைவீடான திருச்செந்தூருக்கு பயணம் சென்றுள்ள விஜய், இன்று அதிகாலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கடலில் இறங்கி வழிபாடு மேற்கொண்ட அவர், முருகனை மனமுருக வேண்டினார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் விஜய்க்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து எதிரிகளை வீழ்த்தி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டி, தவெக சார்பில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது
திருச்செந்தூருக்கு விஜய் வருகை தந்ததை கேள்விப்பட்ட ரசிகர்கள், தொண்டர்கள் அதிகாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கோயில் வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் திருச்செந்தூரை தொடர்ந்து விஜய்யின் அடுத்த ஆன்மீக பயணம் எங்கே? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, வரும் 3ஆம் தேதி மராட்டியத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று விஜய் வழிபாடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பலமுறை இந்த கோயிலுக்கு சென்று விஜய் வழிபாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
