காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பனைமரத்தில் நுங்கு பறித்தபோது, மின்சார கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த டில்லிகணேஷ் (வயது 17), தட்சணாமூர்த்தி (வயது 17) ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்களும் தங்கள் நண்பர்களுடன் மின் கம்பம் அருகே இருந்த பனை மரத்தில் நுங்கு பறித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நுங்கு மின்மாற்றியின் வயரில் சிக்கியது. அதனை கரும்பு கம்பியைப் பயன்படுத்தி எடுத்து உள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவர் மீதும் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நுங்கு ஆசையில் பனமரம் ஏறி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
