சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது. இன்று வர்த்தகத் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு ரூ.95.02 ஆக சரிந்தது, இது இந்திய செலாவணி வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவாகும். கடந்த மூன்று வாரங்களாகவே தொடர்ந்து சரிந்து வரும் ரூபாய் மதிப்பு, தற்போது ரூ95-ஐத் தாண்டியுள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடுமையான வீழ்ச்சிக்கு உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் போக்கு மற்றும் ஹார்முஸ் ஜலசந்திபகுதியில் நிலவும் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 120 டாலரைத் தாண்டி, 126 டாலர் வரை உயர்ந்துள்ளது. எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிகப்படியான டாலர்களைச் செலவிட வேண்டியுள்ளதால், ரூபாய் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.
முன்னதாக, மார்ச் மாதத்தில் நிலவிய போர் பதற்றத்தின் போதும் ரூபாய் மதிப்பு ரூ.95-ஐத் தொட்டது. அப்போது ரிசர்வ் வங்கி மேற்கொண்ட சில அதிரடி நடவடிக்கைகளால் சரிவு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள் காரணமாக டாலர் வலுவடைந்து வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி மீண்டும் சந்தையில் தலையிடக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
