தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும் என்றும் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச உழைப்பாளர்களின் திருநாளாம் மே தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிவப்பு சீருடையில் வந்து மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
பின்னர், நிகழ்வில் பேசிய அவர், உரிமைக்காகவும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மே முதல் நாள் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார். இந்தியாவில் முதன் முதலில் மே முதல் நாளை சென்னையில் தான் கொண்டாடத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவித்து மே தினத்தை கொண்டாடத் தொடங்கியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக மட்டுமில்லாமல் அந்த விடுமுறை நாளை முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சட்டமாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தோடு, அந்தக் கொள்கையோடு ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும், அது தொடரும் என்றும் அவர் கூறினார்.
தொழிலாளர்கள் மீது தொழிலாளர்களின் உரிமை மீது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி எந்தளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தான் மட்டுமல்லாமல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம், பணியாற்றுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
