தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 2வது வாரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையுமா அல்லது புயலாக வலுப்பெறுமா என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளது.
வழக்கமாக மே மாதத்தில் அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிக மழையைக் கொடுக்கும்.
இதனிடையே சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
