தேர்தலில் விஜய் தோல்வியடைந்து விடுவார் என்ற அச்சத்தில், இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகக் களமிறங்கியுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தீவிர ரசிகர், விஜய் இந்தத் தேர்தலில் வெற்றி பெறமாட்டார் எனப் பரவிய வதந்திகளைக் கேட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
வாக்கு முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே, வதந்திகளை உண்மை என நம்பிய அந்த இளைஞர், மிகுந்த விரக்தியில் திடீரெனத் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் எனப் சமூக ஆர்வலர்களும் அரசியல் பிரமுகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவது வேதனையளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது அந்த இளைஞரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
