தமிழக ஆளுநர் மாளிகையான கிண்டி ராஜ் பவனில் இன்று காலை அரங்கேறிய நிகழ்வுகள், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க முற்பகல் 11 மணிக்குத்தான் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே, அதாவது 10:45 மணிக்கே விஜய் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். ஆளுநர் அப்போது தனது சட்ட வல்லுநர்கள் மற்றும் தனிச் செயலாளருடன் மிக முக்கியமான ஆலோசனையில் இருந்ததால், விஜய் சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த விஐபி காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சட்ட வல்லுநர்களுடனான ஆலோசனையை முடித்த பிறகே, ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், ஆளுநர் தரப்பிலிருந்து பல கடினமான கேள்விகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களின் நம்பகத்தன்மை, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காலக்கெடு மற்றும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வரக்கூடிய சிக்கல்கள் குறித்து ஆளுநர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு விஜய் தரப்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும், ஆளுநர் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டாரா என்பதில் இன்னும் தெளிவில்லை.
இந்த நீண்ட பேச்சுவார்த்தையின் முடிவில், தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருந்த “ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதம்” விஜய்க்கு வழங்கப்படவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தவெக தரப்பில் அளித்த ஆவணங்களை மீண்டும் ஒருமுறை சட்ட ரீதியாக ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட முடிவை எடுக்க முடியும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆளுநர் மாளிகைக்குச் சென்றால் நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்த தவெக தொண்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆட்சியமைப்பதில் நிலவும் இந்த இழுபறி இப்போது உச்ச நீதிமன்றத்தை நோக்கியோ அல்லது சட்டப் போராட்டத்தை நோக்கியோ நகரும் சூழல் உருவாகியுள்ளது.
