தமிழக அரசியலில் நிலவும் இழுபறிக்கு இடையே, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் இன்று அவசரமாக டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் பெரும் அரசியல் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுகவின் இந்தத் திடீர் டெல்லி நகர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசியத் தலைமைக்கும் அதிமுகவுக்கும் இடையே ஒரு புதிய அரசியல் சமன்பாடு உருவாக வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், கட்சித் தலைமை வழங்கிய மிக முக்கியமான ரகசியப் பணிகளை முன்னெடுப்பதற்காகவே அவர் டெல்லி விரைந்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தை நிரூபிக்கத் திணறி வரும் வேளையில், சி.வி. சண்முகம் டெல்லியில் பாஜக மேலிடத் தலைவர்களைச் சந்தித்துத் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஒருபுறம் ஆளுநர் மாளிகையில் சட்ட ரீதியான ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் டெல்லி அரசியல் மேடையில் அதிமுக தனது வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
