முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவரை இம்மாதம் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழகத்தில் புதிய அரசியல் களத்தினை முன்னிறுத்தி வருகிறார்.
பதவியேற்பு விழாவின்போது மேஜையை நகர்த்த உதவியது, பெரியார் திடலில் தானே பூத்தட்டை கையில் வைத்தபடி பெரியார் சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியது, தி.க.தலைவர் கி.வீரமணியிடம் இருந்து பூச்செண்டினை வாங்கி கீழே வைத்தது என வெகு இயல்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக நிறுவனர் வைகோபால்சாமி ஆகியோரை சந்திக்க செல்வது என எதிர்க்கட்சியினரை ஒரு முதலமைச்சரே நேரில் சென்று சந்திக்கும் புதிய வழக்கத்தினையும் தமிழக அரசியல் களத்துக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், மரியாதை நிமிர்த்தமாக டெல்லிக்கு சென்று பிரதமர், குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 நாள் பயணமாக டெல்லி சென்று குடியரசு தலைவர் முர்மு, குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அப்போது தமிழ்நாடு நலன் குறித்த கோரிக்கைகளையும் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோரையும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சந்திக்க இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.
