தமிழக அரசியலில் இது ஒரு வரலாற்றுத் தருணம். திராவிட அரசியலின் 60 ஆண்டுகாலச் சங்கிலியை உடைத்து நடிகர் விஜய் ஆட்சிக் கட்டிலைப் பிடித்துள்ள சூழலில், தமிழக சட்டமன்றம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும் திமுக, தற்போது தனது அடுத்தகட்ட காயை நகர்த்தியுள்ளது. திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைமையின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் “விஜய் Vs உதயநிதி” என்கிற நேரடிப் போரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது வெறும் அலங்காரப் பதவி அல்ல; அது ஆளுங்கட்சியின் ஒவ்வொரு நகர்வையும் கூர்மையாகக் கவனித்து, விவாதக் களத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய பொறுப்புடையது.
திமுகவின் போராட்ட வரலாறு
எதிர்க்கட்சியாக இருக்கும்போது மிகத் திறமையாக ‘அடித்து ஆடக்கூடிய’ கட்சி திமுக. இதற்குச் சில வரலாற்றுச் சான்றுகள் உண்டு. உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவும் திமுக முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி தனது அரசியல் வாழ்க்கையில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்க்கையை சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியே பெயரெடுத்தவர். அந்த வகையில் திமுக எதிர்க்கட்சியாக மிக திறமையாக அடித்து ஆடக்கூடிய கட்சி. 1991 – 1996 – ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் பரிதி இளம்வழுதி என்ற ஒற்றை எம்.எல்.ஏ-வை வைத்துக்கொண்டு, ஜெயலலிதா ஆட்சிக்கு டஃப் கொடுத்த கட்சி திமுக.
அதற்கு முன்னதாக 1970-களில் எம்.ஜி.ஆர், திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய காலகட்டத்தில், கருணாநிதியின் தலைமையிலான திமுகவை சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ரகுமான் கான், துரைமுருகன், க. சுப்பு ஆகிய மிக வலுவாகக் காத்த மூவர் கூட்டணி “இடி, மின்னல், மழை” என்று அழைக்கப்பட்டது. கருணாநிதியால் அப்படி செல்லமாக அழைக்கப்பட்ட இவர்கள், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர்.
அதேபோன்று திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவராக மிகச் சிறப்பாக செயல்பட்ட அனுபவம் உண்டு. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக திமுகவை ஆட்சியில் அமர வைக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டவர்.
விஜய்க்கு டஃப் கொடுப்பாரா உதயநிதி?
இத்தகைய பின்னணியில்தான் உதயநிதி திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக, அதாவது எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கே.என்.நேரு போன்ற அனுபவமிக்க மூத்த தலைவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், எ.வ.வேலு திமுக கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், திமுக தலைமை உதயநிதிக்கு இந்த முக்கியப் பொறுப்பை வழங்கியுள்ளது. இது ஒரு துணிச்சலான முடிவா அல்லது உதயநிதியின் அரசியல் எதிர்காலத்திற்கான ஒரு பரீட்சையா என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்றிய அனுபவம் உதயநிதிக்கு மிகவும் குறைவு. இதற்கு முன்னர் திமுக ஆட்சியில் இருந்தபோது அவர் அமைச்சராகப் பதவி வகித்தார். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதும், மக்கள் பிரச்சினைகளை அவையில் உரக்கப் பேசுவதும் ஒரு சவாலான கலை. கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு போன்ற சீனியர்கள் அவையின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்குப் பதிலாக உதயநிதி முன்நிறுத்தப்படுவது, அவர் இந்தச் சூழலை எப்படி கையாளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியின் அரசியல் பயணத்தில் இதுவே உண்மையான ‘ஞானஸ்நானம்’ (Baptism) என்று சொல்லலாம்.
மறுபுறம், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராக முதல்வராகி இருக்கும் விஜய், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளார். விஜய்யின் அரசியல் பாணி மற்றும் பேச்சுகள் மக்கள் மத்தியில் ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ளன. இந்த ‘விஜய் மேஜிக்கை’ சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உதயநிதிக்கு உண்டு. விஜய்க்கு இணையான மக்கள் செல்வாக்கை (Mass Appeal) உதயநிதி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சட்டமன்ற விவாதங்களில், அவர் விஜய்யை அரசியல் ரீதியாகக் கையாளும் விதம் சிறப்பாக அமைந்தால் மட்டுமே, அவர் மக்கள் மத்தியில் ஒரு பக்குவப்பட்ட தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
அதேவேளையில், திமுக மற்றொரு முக்கியமான நகர்வையும் மேற்கொண்டுள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள திமுக செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை (Gag Order) கட்சித் தலைமை தற்போது நீக்கியுள்ளது. இது, கட்சியின் கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் இன்னும் வேகமாகப் கொண்டு சேர்க்கும் முயற்சி. விஜய்யின் வருகையால் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள பிம்பச் சிதைவைத் தடுக்க, ஆக்ரோஷமான ஊடகப் பிரச்சாரம் தேவை என்பதைத் தலைமை உணர்ந்துள்ளது.
விஜய்யின் எழுச்சி திராவிடக் கட்சிகளுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த சூழலில், திமுக ஒரு புதிய தலைமுறையை முன்னிறுத்தி அந்தச் சவாலை எதிர்கொள்ளத் துணிந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், அவர் ஒரு சிறந்த மக்கள் தலைவராக உருவெடுப்பார். மாறாக, அனுபவமின்மையால் சறுக்கினால், அது கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும். எது எப்படியோ, தமிழக அரசியல் களம் இனி ஒருபோதும் பழையபடி இருக்கப் போவதில்லை. விஜய் கொடுக்கும் டஃப்-ஃபை உதயநிதி எப்படி முறியடிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகால அரசியல் திசை தீர்மானிக்கப்படும். இது உதயநிதிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு மற்றும் அக்னிப் பரீட்சை!
- பா. முகிலன்
