தமிழக அரசியலில் “இரட்டை இலை” சின்னம் மீண்டும் ஒருமுறை பிளவுபடும் அபாயத்தைச் சந்தித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு பெரும் அணி திரண்டுள்ளது, கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
எஸ்.பி. வேலுமணி தலைமையில் 30 எம்.எல்.ஏ-க்கள்
தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று ஒரு கடிதத்தை வழங்கியுள்ளார். அதில், “அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி செயல்படுவார்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு ஆதரவாக 47 அதிமுக எம்.எல்.ஏக்களில் 30 பேர் கையெழுத்திட்டிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மறுபுறம், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெறும் 17 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கடிதம் அளித்துள்ளனர். சட்டமன்றத்தில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் வேலுமணி பக்கம் சாய்ந்துள்ளதால், அதிமுக அதிகாரப்பூர்வமாக இரு அணிகளாகப் பிரிந்துவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பிளவுக்குப் பின்னணியில் டெல்லி பாஜகவா?
இந்தத் திடீர் பிளவிற்குப் பின்னால் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கரம் இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகிய இருவரும் தேர்தலுக்கு முன்பு இருந்தே பாஜக மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததாக கூறும் அரசியல் அரசியல் ஆய்வாளர்கள், அதிமுகவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவோ அல்லது தங்களுக்குச் சாதகமான ஒரு தலைமையைக் கட்சிக்குள் உருவாக்கவோ டெல்லி மேலிடம் திட்டமிட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான போக்கைக் காட்டிலும், பாஜகவுடன் இணக்கமாகச் செல்லும் வேலுமணி போன்ற தலைவர்களையே அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.
விஜய்க்கு ஆதரவு கொடுக்குமா வேலுமணி அணி?
தமிழக அரசியலில் தற்போது மிக முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்கு (118) இன்னும் சில இடங்கள் தேவைப்படுகின்றன. தற்போது விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்து விஜய் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
ஆனால், சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் கல்விக்கொள்கை போன்ற விவகாரங்களில் விஜய்யின் செயல்பாடுகள் தங்களது கொள்கைகளுக்கு முரணாக இருந்தால், எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெற இந்தக் கட்சிகள் தயாராக உள்ளன. இத்தகைய இக்கட்டான சூழலில், வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் அணி விஜய்க்குத் தேவையான “ஆதரவை” வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
“விஜய்யின் ஆட்சிக்கு ஆபத்து வரும்பட்சத்தில், வேலுமணி தலைமையிலான 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்து ஆட்சியைக் காப்பாற்றக்கூடும். இது, ”விஜய் தலைமையிலான ஆட்சியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் பாஜகவின் திட்டமாகவும் இருக்கலாம்“ என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
பிளவுக்கான காரணங்கள்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த தொடர் தேர்தல் தோல்விகளே இந்த அதிருப்திக்கு முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது. 2021 தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 21% ஆகக் குறைந்துள்ளது.
வலுவான கூட்டணிகள் இல்லாதது அதிமுகவின் வெற்றியைப் பாதித்ததாகச் சீனியர் அமைச்சர்கள் கருதுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றத்திற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் ஒருதலைப்பட்சமான முடிவுகள் பல்வேறு மண்டலத் தலைவர்களிடையே அதிருப்தியை உருவாக்கியிருந்தது.
இனி என்ன நடக்கும்?
சட்டமன்றத்தில் பெரும்பான்மை அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு எஸ்.பி. வேலுமணிக்கு இருப்பதால், அவரே அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அதேசமயம், கட்சியின் சின்னமான ‘இரட்டை இலை’ யாருக்கு என்பதில் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் சட்டப் போராட்டம் தொடங்கலாம்.
பாஜகவின் நிழலில் இயங்குவதாக சொல்லப்படும் வேலுமணி அணி, விஜய்யின் அரசுக்கு ஆதரவு அளித்தால், அது தமிழக அரசியலில் இன்னொரு பரபரப்பைக் கிளப்பும். திராவிட அரசியலின் மையப்புள்ளியாக இருந்த அதிமுக, இப்போது தேசியக் கட்சியின் வழிகாட்டுதலின்படி ஒரு புதிய கூட்டணியை நோக்கி நகர்வது அக்கட்சியின் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் இந்த உள்கட்சிப் பூசல் வெறும் அதிகாரப் போட்டி மட்டுமல்ல, இது தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகால அரசியலைத் தீர்மானிக்கப்போகும் ஒரு சதுரங்க ஆட்டம். எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை மீட்டெடுப்பாரா அல்லது எஸ்.பி. வேலுமணி – விஜய் – பாஜக என்ற புதிய கூட்டணி வலுப்பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- பா. முகிலன்
