தமிழக முதல்வர் விஜயின் ஜனநாயகன் திரைப் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் ஜாமின் மனுவினை மீண்டும் தள்ளுபடி செய்து, சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஜனநாயகன் படம் தணிக்கை வாரியத்தின், மறு ஆய்வு குழு முன்பாக ஆய்வில் உள்ள நிலையில், ஏப்ரல் 3ம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.
இதுதொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்ரீநாத், இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, 22 ஆவது கூடுதல் அமர்வு நீதிபதி எஸ். ரம்யா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார் தரப்பில், இந்த படத்தை ஆன்லைன், சமூக வலைதளங்களில் வெளியிட்டதில், தங்களுக்கு எந்த பங்கும் இல்லை. கூகுள் ட்ரைவ் லிங்க் மட்டும் பெற்றனர். இவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. கடந்த 25 நாட்களாக சிறையில் இருந்து வருவதாகவும் எனவே ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், பல கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால், பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதால், பெரும் தொகையை ஈட்டி உள்ளனர்; புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது; இந்த சதித்திட்டத்தின் மற்ற தொடர்புகள் குறித்தும் கண்டறியப்பட வேண்டும் என்பதால், ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகளின் தீவிரம், தற்போதைய புலன் விசாரணை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஸ்ரீநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
