சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, சீமான் பொதுவெளியில் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார். இதனிடையே, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், நேற்று முன்தினம் சீமானை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட போதிலும், சீமான் செய்தியாளர்களிடம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள், ஊடகங்கள் திட்டமிட்டுத் தங்கள் கட்சியையும், தலைமை ஒருங்கிணைப்பாளரையும் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டி சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தற்போது சீமானின் அடுத்தகட்ட நகர்வு குறித்து நாதக வட்டாரங்கள் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளன. “முதலமைச்சர் விஜய் எப்போது அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளிக்கிறாரோ, அதற்குப் பிறகுதான் சீமானும் செய்தியாளர்களைச் சந்திப்பார்” என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தனது தந்தையின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரனையூர் கிராமத்திற்குச் சென்றார். அங்கு அமைந்துள்ள தனது தந்தை செந்தமிழனின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை முருகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அப்போது அவரிடம் கேள்வி எழுப்ப முயன்ற செய்தியாளர்களிடமும் முதலில் முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்கட்டும், பிறக்கு நான் பேட்டி கொடுக்கிறேன் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
