தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்ந்து அவமதிக்கப்படுவதைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசியல் மரபுகளில் பல காலங்களாக நிலைத்து வரும் உயரிய நடைமுறை, எந்த அரசு நிகழ்வாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே ஆகும். அது வெறும் நிகழ்ச்சி நடைமுறை அல்ல. தமிழர் இனத்தின் மொழி மரியாதை, பண்பாட்டு அடையாளம் மற்றும் வரலாற்றுப் பெருமையின் உயிர்ப்பாகும்.
ஆனால், இன்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதோடு, தமிழ்நாட்டின் மரபில் இல்லாத வந்தே மாதரம் முதலாவதாக இசைக்கப்பட்டிருப்பது, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஆழமாக புண்படுத்தியுள்ளது.
இது சாதாரண நிர்வாகத் தவறோ அல்லது நிகழ்ச்சி ஒழுங்குப் பிழையோ அல்ல. கேரளா ஆளுநராகவும் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகவும் அவ்வப்போது வந்து செல்லக்கூடிய ஆளுநர் இராசேந்திர அர்லேக்கர் அவர்கள் தொடர்ச்சியாகத் தமிழ்மொழி, தமிழர் மரபு மற்றும் தமிழ்நாட்டு உரிமை உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு, பாசிச பாஜக அரசின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் கைப்பாவையாகவே செயல்படுகிறார் என்பது மேலும் தெளிவாகியுள்ளது.

அதே நேரத்தில், புதிய அரசாங்கம் இதனைத் தடுக்க முடியாத வலிமையற்ற நிலையிலா இருக்கிறது? என்றக் கேள்வியும், இந்த அவமதிப்புக்கு அமைதியாக இணங்கியதா? என்றச் சந்தேகமும் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது. தமிழ்மொழி மரியாதைத் தொடர்பான விஷயங்களில் அரசு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாதது கவலைக்குரியது.
எனவே, இந்த நிகழ்வில் ஏற்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்புக்கு ஆளுநரும், நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு பொறுப்பான அரசுத் தரப்பும் உடனடியாகத் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இனி வரும் காலங்களில் எந்த அரசு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதைத் தொடர்பான பாரம்பரிய நடைமுறைகள், எந்த சூழலிலும் மீறப்படாத வகையில் சட்டபூர்வமான மற்றும் கட்டாயமான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

அதே நேரத்தில், பாசிச பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநர் ராசேந்திர அர்லேக்கர் அவர்களின் தமிழ் சமூகத்திற்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்து, விரைவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
