பக்ரீத் பண்டிகையை ஒட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை இன்று களைகட்டியது. தக்காளி முதல் தங்கம் வரை அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பெருமை வாய்ந்த இந்தச் சந்தையில், பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளின் தேவை அதிகரித்துள்ளதால், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதுமட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டன. சந்தைக்கு இந்த வாரம் இஸ்லாமியர்கள் அதிகமாக வந்திருந்தனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை ஆடு எனப் பல்வேறு இன ஆடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆடுகளின் உடல் எடை, தரம் மற்றும் ரகங்களுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ10,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை ஆடுகள் விறுவிறுப்பாக விற்பனையாகின.
பண்டிகைக் காலம் என்பதால் அதிகாலை முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
இன்றைய ஒரே நாளில் மட்டும் போச்சம்பள்ளி சந்தையில் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகச் வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
