அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த போர் தொடங்கிய சமயத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் தற்போது போர் நிறுத்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியிருக்கிறது.
இந்த நேரத்தில் தங்கம் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது, அந்தவகையில், சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, சவரன் 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று (மே 25) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம் (22 கேரட்) கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.14,780-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், திருமண சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பத்தினர் கடும் கவலை அடைந்துள்ளனர்.
