சிங்கப்பெண் அதிரடிப்படை பல் இல்லாத அமைப்பாக இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் விமர்சித்துள்ளன என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள், சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் தனது கருத்துகளை வலியுறுத்தினார். தூத்துக்குடி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சரான ஸ்ரீநாத், தூத்துக்குடியை துறைமுக நகரமாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட தமிழிசை, “முதலில் தங்கள் தொகுதியின் நிலவரம், மக்களின் அன்றாட பிரச்னைகள் ஆகியவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தொகுதி பிரச்னைகளை அறியாமல் பெரிய வாக்குறுதிகளை அளிப்பது பொருத்தமற்றது” என்றார்.
மக்கள் இத்தகைய அரசியல் நடவடிக்கைகளை விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை அல்லது என்கவுண்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தினார். சமீபத்தில் கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் விழுப்புரத்தில் 11 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெண்கள் அதிரடிப்படைக்கு முதல் கையெழுத்து போட்டதை வரவேற்ற அவர், ஆனால் இந்த அமைப்பு பல் இல்லாததாக செயல்படுவதாக ஆங்கில ஊடகங்கள் விமர்சித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, விஜய் இந்த விமர்சனங்களுக்கு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார். மேலும், சிறுபான்மையினருக்கு ஆதரவு என விஜய் கூறியுள்ளதைப் பற்றியும் பேசிய தமிழிசை, “எல்லோரும் சிறுபான்மையினருக்கு ஆதரவு என்றால், தங்களுக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்னைகளை யார் தீர்ப்பது?” என்ற கேள்வியை எழுப்பினார்.
ஒரு குழந்தை கொலை தொடர்பாக பேச வந்த காவல்துறை அதிகாரியும் அமைச்சரும் சிரித்துக்கொண்டிருந்த காட்சியை சுட்டிக்காட்டிய அவர், “இவர்கள் என்ன உணர்வில் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை. புதிய அரசு இத்தகைய விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்றார். காங்கிரஸ் கட்சி பதவி ஆசையால் உடனடியாக தவெகவுடன் இணைந்ததாகவும், தனித்து நின்று வெற்றி பெறும் சாத்தியம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அதிமுக-திமுக இணைந்து பதவிக்கு வர பாஜக உதவியதாக மாணிக்கம் தாகூர் கூறிய கருத்தை வன்மையாக கண்டித்த தமிழிசை, இத்தகைய அறிக்கைகள் தவறானவை என மறுப்பு தெரிவித்தார்.
