மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் ஒருவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனத்தையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற இளைஞரை மர்மகும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குதூன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சித்திரை திருவிழாவின் போது குபேந்திரன் என்ற இளைஞருக்கும் முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் முத்து மணிக்கு பலமாக அடிப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துமணி, அவரது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து குபேந்திரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. இதனிடையே போலீசார் கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்றதொரு கொடூரமான செய்தியைக் கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
தற்போதைய தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத ஒரு சூழ்நிலையே நிலவி வருகிறது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு இந்த அளவுக்குக் கடுமையாகச் சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு உண்மையில் அறிந்து வைத்துள்ளதா என்பதே பெரிய சந்தேகமாக உள்ளது” என அவர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
