ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போதும், சூதாட்டமும் தொடங்கும். இந்தியாவின் மிகப்பெரிய மாஃபியா நடைபெறுவது இந்த ஐபிஎல் தொடர் மூலம் தான். அப்படி பெங்களூருவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெங்களூரு உட்பட நாடு முழுவதும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து பல்வேறு கும்பல்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து சுமார் ரூ.1லட்சத்து 10,000 மதிப்பிலான 6 செல்போன்கள், ரூ.1லட்சத்து 6 ஆயிரத்து 433 ரொக்கம், ரூ.13கோடியே 37லட்சம் மதிப்பிலான சூதாட்ட காயின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.13கோடியே 39 லட்சத்து 16ஆயிரத்து 433 அகும். மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 17 வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.
