அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்தது ஜனநாயக படுகொலை என பாமக தலைவர் அன்புமணி கண்டித்துள்ளார்.
புதுச்சேரியில் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எதிர்க்கட்சயை சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துள்ளது ஜனநாயக படுகொலை. இதனை வன்மையாக கண்டித்தார்.
மக்கள் விருப்பத்திற்கு எதிராக 4 அதிமுக எம்எல்ஏக்கள் எந்த காரணமுமின்றி வெற்றி பெற்ற 20 நாட்களில் தவெகவில் இணைந்துள்ளனர். இது ஜனநாயக படுகொலை மட்டுமல்ல ஒரு மோசடி எனவும் தமிழக மக்கள் இதனை விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு எதிரான செயல் இது எனவும், குதிரை பேரத்தைவிட மோசமானது எனவும் ஆவேசம் காட்டினார்.
20 நாட்களில் ராஜினாமா செய்து உடனே இன்னொரு கட்சியில் சேர்வது நல்லதல்ல.மக்கள் தீர்ப்புக்கு எதிரான செயல்.
இடைத்தேர்தல் வந்தால் 4 வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். அனைத்து கட்சிகளும் சேர்ந்து பொது வேட்பாளர்களைக் கூட நிறுத்துவோம் எனத் தெரிவித்தார்.
சமூக நீதிக்காக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வந்த போது கோரிக்கை வைத்தேன். முதல் அமைச்சரின் முதல் வேலை இது இருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பிற்கு டிஜிபி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.
தமிழக முதல்வர் கூறிய இட ஒதுக்கீடு, மதுபான கடைகள் அகற்றம், மணல் கொள்ளையைத் தடுப்பது போன்றவை பாமகவின் வாக்குறுதிகள். அதனால் வாக்கெடுப்பில் பாமக நடுநிலை வகித்தது எனக் கூறினார்.
