முதலமைச்சர் விஜயின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாய சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (தவெக) அளித்த முக்கிய வாக்குறுதியில் ஒன்று கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்வது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல், வெறும் ரூ.50,000 வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் தள்ளுபடி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் அறிக்கையில் தவெக தலைவர் விஜய், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடியும், அதற்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்த அறிவிப்பு டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே வெளியிடப்பட்ட அறிவிப்பு வாக்குறுதிக்கு நேர் எதிரானதாக இருந்தது. ரூ.50,000க்கு மேல் கடன் பெற்ற பெரும்பாலான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் வரம்புக்கு வெளியே தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் புதிய வகை போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். “முதலமைச்சர் விஜய் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். வாக்குறுதியை நிறைவேற்றாமல் 50,000 ரூபாய் வரை மட்டும் தள்ளுபடி என்று அறிவித்து எங்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்டார்” என்று விஸ்வநாதன் குற்றம் சாட்டினார். விவசாயிகள் சாலையில் செல்லும் வாகனங்களிடம் பிச்சை எடுத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
“இந்த அறிவிப்பு விவசாயிகளின் தற்கொலை எண்ணத்தை அதிகரிக்கும். ஏற்கனவே பல ஆண்டுகளாக கடன் சுமையில் தவிக்கும் எங்களுக்கு இது பெரும் ஏமாற்றம்” என்று போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர். போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவர்கள், முழுமையான கடன் தள்ளுபடியை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர்.டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இதுபோன்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து மாநில அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு காட்டும் தயக்கம் விவசாய சமூகத்தின் நம்பிக்கையை பெரிதும் பாதித்துள்ளது. முதலமைச்சர் விஜய் இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒருமித்த குரலாக உள்ளது.
