வடலூர் அருகே பாதி உடல் புதைந்த நிலையில் முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத இளம்பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் நெய்வேலி செல்லும் சாலையில் உள்ள கண்ணு தோப்பு பகுதியில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அப்பகுதியை உலுக்கியுள்ளது. விக்கரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியின்போது, சாலையின் ஓரத்தில் மணல் மற்றும் மண் குவியலில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் மண் குவியலுக்கு அருகே பெண்ணின் கால் மற்றும் முகம் மட்டும் ஓரளவு வெளியே தெரிந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வடலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த உடல் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுடையது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் இரண்டு நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவ ஆய்வின் அடிப்படையில் போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டதா அல்லது பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு கொல்லப்பட்டதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆய்வு முடிந்த பின்னரே உடலைத் தோண்டி எடுக்கும் பணி தொடங்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வந்து உடலை புதைத்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சாலை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பெண் பாதுகாப்பு குறித்த கவலை மக்களிடையே எழுந்துள்ள நிலையில், சாலைப் பணிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என சிலர் விமர்சனம் செய்கின்றனர். போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், உடலின் அடையாளம் விரைவில் கண்டறியப்பட்டு, கொலையின் பின்னணி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியானவுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
