திருச்சி திருவரங்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், அங்கு நோயாளிகளிடம் சக்கர நாற்காலியில் தள்ளுவதற்காக ரூ.100, ரூ.200 எனப் பணம் பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த செயல் அதிரடி நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.
இன்று திருச்செந்தூர் கோயிலுக்கு சென்ற அறநிலையத் துறை அமைச்சரை யார் என்று தெரியாமல் சிறப்பு தரிசனத்துக்காக அவரிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு, அதனை ஜி பே வழியாகப் பெற்று கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறார்கள் அர்ச்சகர்கள். அவர்களிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
அதே நேரம், அமைச்சரின் உதவியாளரிடம் சிறப்பு தரிசனத்துக்காக லஞ்சம் கேட்ட பாதுகாப்பு பணியில் இருந்த 2பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சரின் செயல் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. அர்ச்சகர்கள் என்றால் அவர்களிடம் மன்னிப்பு கடிதம் பெறுவதும், மற்றவர்களை பணி நீக்கம் செய்வதும் எத்தகைய நடவடிக்கை என வினா எழுந்துள்ளது.
நீதி சாதியை பொறுத்து மாறுபடுகிறது. சொந்த சாதிக்காரனுக்கு மன்னிப்பு. அடுத்த சாதிக்காரனுக்கு தண்டனையா என அமைச்சரின் நடவடிக்கை தொடர்பாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
