சுர்ஜித்தின் தாயாரும், சப்-இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளி சுர்ஜித்தின் தாயாரும், பெண் சப்-இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரி, சுமார் 10 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “நெல்லை மாவட்டத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்குப் பின்னர் கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27 வயதான கவின் செல்வகணேஷ் (கவின்), ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். காதல் தொடர்பான பிரச்னையில் அவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சமூக வலைதளங்களிலும், அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாளையங்கோட்டை போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, முதன்மை குற்றவாளியான சுர்ஜித்தையும், அவரது தந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணனையும் கைது செய்தனர்.
பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சுர்ஜித்தின் உறவினர் ஜெயபாலையும் கைது செய்தனர். மூவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். குற்றப்பத்திரிகை தயாரித்து நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி, கடந்த கோர்ட் விசாரணையின்போது சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கண்டிப்புடன், “தொடர்ந்து தலைமறைவாக உள்ள பெண் சப்-இன்ஸ்பெக்டரை உடனடியாகக் கைது செய்யுங்கள்” என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. குழு தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டது. நீண்ட நாட்களின் தேடுதலுக்குப் பிறகு, நேற்று முன்தினம் (மே 29) கிருஷ்ணகுமாரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர், போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படும்போது துணியால் முகத்தை மறைத்தபடி கதறி அழுததாகக் கூறப்படுகிறது.
அவரை விசாரணைக்குப் பின் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கைது, ஆணவக் கொலைகளுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதை நிரூபிக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
