கோவையில் டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் நேரில் பெற்றுக்கொண்டார். பின்னர் ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், டாஸ்மாக் துறைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை மாற்றி, அதனை ஒரு கண்ணியமான துறையாக மாற்ற அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் ஜூன் மாதத்திற்குள் காலி மதுபாட்டில்களை ஊழியர்களே நேரடியாகக் கையில் வாங்கும் நிலை முழுமையாகத் தவிர்க்கப்படும். இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்துப் பேசப்பட்டு வருகிறது. பாட்டில்களில் ஊழியர்கள் தனியாக ஸ்டிக்கர் ஒட்டும் முறை ஒழிக்கப்பட்டு, மதுபானத் தயாரிப்பின் போதே ஸ்டிக்கர் ஒட்டி வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
மதுபாட்டில்களுக்குக் கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். பாட்டிலுக்கான டெபாசிட் தொகை மட்டுமே வாங்கப்பட வேண்டும்; அதற்கு மேல் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் தொடங்கப்பட்டது, ஆனால் கடந்த 23 ஆண்டுகளில் இத்துறை தவறான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. இதனால் ஊழியர்களின் குடும்பத்தினரும் ஏளனமாகப் பார்க்கும் சூழல் உள்ளது. இத்துறையில் உள்ள தவறுகள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊழியர்களின் நலனைக் கருதி, அவர்களுக்குப் படிப்படியாக ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல, டாஸ்மாக் துறையையும் மற்றவர்கள் மதிக்கும்படி ஒரு கண்ணியமான துறையாக மாற்றுவதே இலக்கு. அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த 8 நாட்களில், டாஸ்மாக் உருவான வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டுள்ளதாகவும், பார்களைக் கட்டுப்படுத்துவது எங்கு என்று அரசுக்குத் தெரியும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
