கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்குத் தம்பதி இருவர் தங்களது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, வாகனத்தின் உள்ளே இருந்து திடீரென நல்ல பாம்பு ஒன்று ‘உஸ் உஸ்’ என சீறியபடி வெளியே தலைகாட்டியுள்ளது. சத்தம் கேட்டு நிலைதடுமாறிய தம்பதியினர், உடனடியாக ஸ்கூட்டியைக் கீழே போட்டுவிட்டு தப்பியோடினர்.
இதனால் அங்கே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. மக்கள் கூட்டத்தைப் பார்த்து மிரண்ட அந்தப் பாம்பு, அருகில் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது சட்டென ஏறியது. இதைக் கண்டு பேருந்திற்குள் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த 6 அடி நீள நல்ல பாம்பைப் லாவகமாகப் பிடித்துச் சென்றனர். இச்சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.
