இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என்று மகாத்மா காந்தியடிகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாளின் 137-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, திருச்சியில் இருக்கும் தமிழக முதலமைச்சர் விஜய், அஞ்சலை அம்மாளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, கைகூப்பித் தனது நெறிதவறாத மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
கடலூர் மண்ணில் பிறந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் களம் கண்டவர் அஞ்சலை அம்மாள். நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்புச் சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் எனப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று, பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தீரமிக்கவர்.
கடலூருக்கு மகாத்மா காந்தி வருகை தந்தபோது, அஞ்சலை அம்மாள் அவரைச் சந்திக்கக் கூடாது என ஆங்கிலேய அரசு கடுமையான தடை விதித்தது. ஆனால், அந்தத் தடையைத் தவிடுபொடியாக்கும் விதமாக, புடவை கட்டிய குதிரை வண்டியில் மாறுவேடத்தில் வந்து காந்தியைச் சந்தித்து அசத்தினார். இவருடைய இந்த அசாத்திய துணிச்சலைக் கண்டு வியந்துபோன காந்தியடிகள், இவரைப் பாராட்டித்தான் ‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என்று பெருமையோடு அழைத்தார்.
இத்தகைய பெருமைக்குரிய வீரமங்கையின் தியாகத்தைப் போற்றும் வகையில், தற்போது திருச்சி பயணத்தில் இருக்கும் முதலமைச்சர் விஜய், அங்கு அஞ்சலை அம்மாளின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களில் ஒருவருமான அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்தநாளில், அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமைச்சர் செங்கோட்டையன். இதுதொடர்பான புகைப்படத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
