நீட்-யுஜி (NEET-UG) மறுதேர்வை கணினி அடிப்படையிலான (CBT) முறையில் நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. தேசிய தேர்வு முகமை (NTA) ஏற்கனவே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போதைய சூழலில் மறுதேர்வை CBT முறையில் நடத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அரவிந்த் குமார் அமர்வு, ஆர்.ஜே.டி. எம்.பி. சுதாகர் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சத்யம் சிங் ராஜ்புத், மறுதேர்வை CBT முறையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த நீதிமன்றம், “NTA ஏற்கனவே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படுகிறது. இந்த சூழலில் CBT முறையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது” என்று தெரிவித்தது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி தேர்வில் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை (NTA) மாற்றி, சுயாட்சி மற்றும் வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மத்திய அரசு மற்றும் NTA தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் நீட்-யுஜி தேர்வை பேனா-காகித முறைக்கு பதிலாக கணினி அடிப்படையிலான CBT முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்காக புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
