நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அபராதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகளை எளிய டிஜிட்டல் முறையில் தீர்க்கும் நோக்கில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ‘விஷ்வாஸ் 2026’ (VISHWAS 2026) என்ற ஒருமுறை (One-Time) தகராறு தீர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தத் திட்டம் ஜூன் 29, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது 6 மாதங்கள் செயல்பாட்டில் இருக்கும்.
எந்த வழக்குகளுக்கு பொருந்தும்?
இந்தத் திட்டம், 1952-ஆம் ஆண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டத்தின் (EPF & MP Act) பிரிவு 14B-ன் கீழ் விதிக்கப்பட்ட இழப்பீடு (Damages) மற்றும் 2020 சமூகப் பாதுகாப்பு சட்டத்தின் (Code on Social Security) பிரிவு 128-ன் கீழ் விதிக்கப்பட்ட அபராதங்கள் தொடர்பான வழக்குகளுக்கு பொருந்தும்.
திட்டத்தின் முக்கிய நோக்கம்
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
முதலாளிகள் தாமாக முன்வந்து சட்ட இணக்கத்தை (Voluntary Compliance) கடைப்பிடிப்பதை ஊக்குவித்தல்.
நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்தல்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அபராத மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகளை விரைவாக முடித்தல்.
ஊழியர்களின் நலன்களை பாதுகாத்தல்.
எந்த வகை வழக்குகள் இதில் அடங்கும்?
‘விஷ்வாஸ் 2026’ திட்டத்தின் கீழ் பின்வரும் 4 வகையான வழக்குகள் இடம்பெறும்:
நீதிமன்றங்கள் அல்லது பிற நீதித்துறை அமைப்புகளில் நிலுவையில் உள்ள வழக்குகள்.
அபராத வசூல் முழுமையாக அல்லது பகுதியளவில் மட்டுமே நடைபெற்றுள்ள வழக்குகள்.
நோட்டீஸ் வழங்கப்பட்டு இறுதி உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படாத வழக்குகள்.
இதுவரை நோட்டீஸ் கூட வழங்கப்படாத வழக்குகள்.
குறைந்த விகிதத்தில் அபராதம்
ஜூன் 14, 2024-க்கு முன் ஏற்பட்ட தவறுகளுக்கு, EPFO குறைந்த விகிதத்தில் அபராதத்தை மறுகணக்கிடும்.
புதிய விகிதங்கள்:
2 மாதங்கள் வரை தாமதம் – மாதத்திற்கு 0.25%
2 முதல் 4 மாதங்களுக்குள் தாமதம் – மாதத்திற்கு 0.50%
4 மாதங்களுக்கு மேல் தாமதம் – மாதத்திற்கு 1%
விண்ணப்பிக்கும் முன் என்ன செய்ய வேண்டும்?
இந்தத் திட்டத்தின் கீழ் சலுகை பெற விரும்பும் நிறுவன உரிமையாளர்கள்,
சட்டப்படி செலுத்த வேண்டிய முழு வட்டித் தொகையையும் முதலில் செலுத்த வேண்டும்.
பின்னர், தீர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் எந்த மேல்முறையீடும் செய்யமாட்டோம் என்ற உறுதிமொழியையும் வழங்க வேண்டும்.
முழுக்க முழுக்க ஆன்லைன் நடைமுறை
விண்ணப்பங்கள் அனைத்தும் EPFO Employer Portal மூலம் டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் (DSC) அல்லது e-Sign பயன்படுத்தி ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், திட்டத்தை விரைவாக செயல்படுத்த EPFO-வின் மண்டல, பிராந்திய மற்றும் மாவட்ட அலுவலகங்களில் சிறப்பு ‘விஷ்வாஸ்’ பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. வழக்குகள் விரைவாக முடிக்கப்படுகிறதா என்பதை தலைமையகம் மற்றும் மண்டல அலுவலகங்கள் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒருமுறை திட்டத்தின் மூலம், நிலுவை தகராறுகளை முடித்து, சட்ட இணக்கத்தை உறுதி செய்து, வழக்குகளற்ற திறமையான சமூகப் பாதுகாப்பு நிர்வாகத்தை உருவாக்குவதே EPFO-வின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
