மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முக்கிய கோப்புகள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமான சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமாகி உள்ளது. இதுதொடர்பாக சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாயானதாக கூறப்படும் கோப்புகளில் நிலக்கரி வாங்கியது, டெண்டர்கள், மின்மாற்றிகள் வாங்கியது தொடர்பான தரவுகள் இருக்கலாம் என்றும் சுமார் 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போய் உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய வார இறுதி நாட்களில், அலுவலகத்தில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே இருந்த சூழலில் இந்த திருட்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மே 20ம் தேதி தான் கணினிகளில் இருந்த திட்ட கோப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காணாமல் போனதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து கணினி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்ட போது, கணினிகளில் இருந்து ஹார்டு டிஸ்க்குகள் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் மாற்றம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுகிறார். அமைச்சர்கள் தங்கள் துறைகள் சார்ந்த பல்வேறு ஆய்வுகள், நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், கடந்த திமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் சுமார் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதிக விலைக்கு மின்மாற்றிகள் வாங்கியதாகவும் அண்மையில் ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்தநிலையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முக்கிய கோப்புகள், தரவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் மாயமாகி உள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
