அதிமுகவை தொண்டர்கள் தாங்கி பிடித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க. குறித்து விமர்சன கருத்துகளை முன்வைத்து வரும் சில அமைச்சர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், தமிழக அரசியலில் அதிகாரத்தில் உள்ள கட்சியை நாடி சிலர் தங்களது அரசியல் பயணத்தை தொடர முயற்சிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க. என்பது சாதாரண அரசியல் இயக்கம் அல்ல என்றும், வாழ்ந்தாலும் மறைந்தாலும் கொள்கை பிடிப்புடன் கோடிக்கணக்கான தொண்டர்கள் தாங்கி நிற்கும் மக்கள் இயக்கம் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் அ.தி.மு.க.வின் வரலாற்றையும், அதன் தொண்டர்களின் அர்ப்பணிப்பையும் புரிந்துகொண்டு பேச வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இனிமேல் எல்லை மீறிய கருத்துகள் வெளியிடப்பட்டால் அதற்கான எதிர்விளைவுகளை தேர்தல் களத்திலும் மக்கள் மத்தியிலும் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
அ.தி.மு.க. தனது அரசியல் பயணத்தில் பல்வேறு சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது என்றும், தற்போதைய விமர்சனங்களையும் அதேபோல் எதிர்கொள்ளும் வலிமை கட்சிக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். நடிகர் விஜயின் அரசியல் வருகையை குறிப்பிட்ட அவர், எத்தனை புதிய தலைவர்கள் வந்தாலும் அ.தி.மு.க.வின் அடித்தளத்தை யாராலும் அசைக்க முடியாது என்றார்.
மேலும், நேற்று நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளை பார்த்து சிலர் மகிழ்ச்சியடைவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்ட அவர், தேர்தலுக்கு முன்பு கூட்டணிக்காக பல தரப்பினரையும் அழைத்தவர்கள் தற்போது வேறு விதமாக பேசுவதாக விமர்சித்தார். அரசியல் அதிகாரம் கிடைத்திருப்பது நிரந்தரமானது அல்ல என்றும், அரசியலில் ஏற்றத் தாழ்வுகள் இயல்பானவை என்றும் தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜூனா, அ.தி.மு.க.வினரின் 50 சதவீதம் பேர் தங்களுடன் இணைந்துவிட்டதாக கூறியிருப்பதையும் அவர் மறுத்தார். அதேபோல், பல்வேறு கட்சிகளில் இருந்து அரசியல் பயணம் மேற்கொண்ட அமைச்சர் நிர்மல் குமார் குறித்து குறிப்பிட்ட அவர், அரசியல் சூழல் வேறுபட்டிருந்தால் அவர் மீண்டும் அ.தி.மு.க.விலேயே இணைந்திருப்பார் என்றும் தெரிவித்தார்.
“நாங்கள் தேர்தலில் தோல்வியடைந்திருக்கலாம்; ஆனால் அரசியல் ரீதியாக முடிவுக்கு வரவில்லை. மக்கள் ஆதரவுடன் மீண்டும் எழுச்சி பெறுவோம்” என்று ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
