வங்கிகளில் பெற்ற கடனை அடைக்க 100 ஆண்டு பழமையான மா மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளார் விவசாயி ஒருவர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயம் பல தலைமுறைகளாக விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாகவும், பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடுமையான பருவநிலை மாற்றங்கள், கட்டுப்படுத்த முடியாத பூச்சித் தாக்குதல்கள் மற்றும் வரண்டு போகும் மழைப்பொழிவு போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இதனால், முன்பு 41,000 ஹெக்டேர் பரப்பளவில் செழித்து வளர்ந்த மா தோட்டங்கள் தற்போது 33,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளன. இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் தங்கள் குடும்பத்தை ஓட்டி வருகின்றனர்.
ஆண்டுக்கு ஆண்டு சுமார் 5 சதவீத விவசாயிகள் மா மரங்களை அழித்துவிட்டு மாற்றுப் பயிர்களுக்கு மாறுவதால், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் மாவட்டத்தில் மா விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை விவசாய சமூகத்தை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகைய சூழலில், போச்சம்பள்ளி அருகே உள்ள பாப்பானூர் கிராமத்தைச் சேர்ந்த மா விவசாயி பழனிசாமி, வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். வேறு வழியின்றி தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் உள்ள நூறு ஆண்டுகள் பழமையான மா மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, மாவட்டத்தின் பாரம்பரிய விவசாயத்திற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனிசாமி கண்ணீர் மல்கக் கூறுகையில், “தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கூட்டுறவு மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அதை நிறைவேற்றவில்லை. வங்கிகள் தொடர்ந்து வற்புறுத்தியதால், கடனை அடைக்க இந்தக் கடும் முடிவுக்கு வர வேண்டியதாயிற்று” என்றார். இந்தச் சம்பவம் மாவட்டம் முழுவதும் உள்ள மா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழக முதல்வர் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மா விவசாயிகளுக்கென தனி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, பூச்சி மற்றும் பருவநிலை தாக்குதல்களை எதிர்கொள்ள உதவும் தொழில்நுட்ப ஆதரவு, கடன் தள்ளுபடி, மானியங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மா விவசாயத்தைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்பது விவசாய அமைப்புகளின் எச்சரிக்கை. பாரம்பரியப் பயிரான மாவைப் பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.
