தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 12 வயது சிறுமிக்கு மதபோதகரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, தற்போதைய தவெக அரசை, தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் தளப் பதிவில், தூத்துக்குடி ஆனந்த நகர் தேவாலயத்தில் மதபோதகர் அருள்ராஜ் என்பவரால் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகக் கனிமொழி தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எங்குமே பாதுகாப்பில்லை என்னும் அச்சம் கலந்த சூழல் உருவாகியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தவெக அரசு தங்களின் சுய விளம்பரத்திற்காக மட்டுமே செயல்படுவதாக அவர் சாடியுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்பு கொள்ள தனியாக எந்தவொரு அவசர உதவி எண்ணும் கூட இல்லாத ஒரு ‘சிறப்பு படை’யை உருவாக்கி, இந்த அரசு மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.
எந்தவொரு சட்டப்பூர்வமான சிறப்பு அதிகாரமும் இல்லாத இப்படிப்பட்ட ஒரு ‘சிறப்பு படை’யால் பெண்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூகநலத் துறை சார்பில் ஏற்கனவே பெண்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள ‘181’ அவசர எண்ணும், தேசிய அளவில் பல காலமாகச் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான ‘1098’ உதவி எண்ணும் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தில் எதற்காகத் தனியாக ஒரு விளம்பர ‘சிறப்பு படை’யை உருவாக்க வேண்டும்?” என்று காரசாரமாகக் கேட்டுள்ளார்.
