தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17வது சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.
60 ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் 59 இடங்களிலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 47 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதநிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். முதலமைச்சர் விஜய் உள்பட 35 பேர் கொண்ட அமைச்சரவையில் ஆட்சி அமைக்க ஆதரவளித்த காங்கிரசுக்கு 2, விசிகவுக்கு 1, ஐயுஎம்எல் கட்சிக்கு 1 என அமைச்சரவையில் இடம் தந்து தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி ஆட்சியின் பயணத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்.
இந்தநிலையில், தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை (ஜூன் 18) தொடங்க உள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் கூட்டத் தொடரில் 2026- 27ம் நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தவெக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய, பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம், பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போன்ற வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்பு இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாத கால தவெக ஆட்சியில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பள்ளிகள், கோயில்கள் அருகில் இருந்த இந்தக் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.
தமிழகத்தின் கனிம வளக் கொள்ளையை தடுக்கவும், கோயில்களில் சிறப்பு தரிசன வசூலை தடுக்கவும் எடுக்கப்பட்ட தவெக அரசின் உடனடி நடவடிக்கைகள் அதிரடி காட்டின. மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சிரமைப்பு நடவடிக்கைகளும் வரவேற்பை பெற்றன. 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பு, பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம், ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி, 8200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் L & T நிறுவனத்துடன் ரூ.18,600 கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் என வளர்ச்சிக்கான படிக்கட்டுகளை அடுக்கியது தவெக அரசு.
அதேவேளையில் கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மின்வெட்டு விவகாரம் உள்ளிட்டவை தவெக அரசுக்கு தலைவலியாகவே அமைந்தது. கோவை மற்றும் கும்மிடிப்பூண்டியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள், பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்கள், அதுவும் தவெக பிரமுகர்களால் நிகழ்ந்த சம்பவங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடுத்த விமர்சனக்கனைகள் தவெக அரசுக்கு பெரும் சவாலாக அமைந்தது. விவசாயக் கடன் தள்ளுபடி விஷயத்தில் தவெக அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என விவசாய அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கம் மேகதாது பிரச்சனையில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
கடந்த ஆட்சி மீது குறை கூறிய போதும், மின்வெட்டு விவகாரம், தவெக அரசுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியது. குறை கூறுவதை நிறுத்திவிட்டு, செயல்பாட்டில் இறங்குமாறு குட்டு வைத்தன எதிர்க்கட்சிகள். ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன. அதிமுகவின் 4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து தவெகவில் இணைந்த சம்பவங்கள், அக்கட்சி குதிரை பேர அரசியல் விமர்சனத்தை எதிர் கொண்டது.
சினிமா புகழ் மூலம் வாக்குகளைப் பெற்ற கட்சி, நிர்வாக அனுபவமின்மை, கூட்டணி சிக்கல்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என தவெக அரசு சவால்களை சந்தித்த போதும், உடனடி மக்கள் நலத் திட்டங்கள், முதலீட்டு முயற்சிகள், மத்திய அரசுடன் தொடர்பு ஆகியவை நம்பிக்கையை ஏற்படுத்தின.
இந்தநிலையில், பரபரப்பான சூழலில் தவெக அரசின் நாளைய (ஜூன் 18) முதல் சட்டமன்றக் தொடரில் எதிர்க்கட்சிகளை சமாளித்து, வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் செயல்களில் தவெக தீவிரம் காட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
