48 அணிகள் பங்கேற்றுள்ள 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சான்பிரான்சிஸ்கோவில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30மணிக்கு நடைபெற்ற ’ஜெ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா மற்றும் ஜோர்டான் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆக்ரோஷமாக விளையாடிய ஆஸ்திரியா அணியினர், 21-வது நிமிடங்களில் ரோமானோ ஷ்மிட் அடித்த முதல் கோலால் முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிவில் எவ்வளவோ முயன்றும் ஜோர்டான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜோர்டான் அணிக்கு 50-வது நிமிடத்தில் அலி ஓல்வான் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்தார். ஆனால், வீடியோ பரிசோதனைக்கு பிறகு அது ஹேண்ட்பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் கோல் செல்லாமல் போக ஆஸ்திரிய வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பின்னர் 76-வது நிமிடத்தில் ஜோர்டான் வீரர் யாசன் அல்-அரப் துரதிர்ஷ்டவசமாக ஓன் கோல் அடித்ததால், ஆஸ்திரியா 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது. இதையடுத்து சமநிலை கோலுக்காக ஜோர்டான் அணியும், மேலும் ஒரு கோலுக்காக ஆஸ்திரியாவும் கடுமையாக போராடின. அப்போது ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஆஸ்திரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற வைத்தார்.
இறுதியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்திய ஆஸ்திரியா அணி, 3 புள்ளிகளை கைப்பற்றி ‘ஜெ’ பிரிவில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. மெஸ்சியின் ஹாட்ரிக் கோலுடன் அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜென்டினா அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.
