கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசாமாக பயணிகள் உயிர் தப்பினர்.
திருப்பூரிலிருந்து கோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ‘கே.எம்.எஸ்’ (KMS) தனியார் பேருந்து, நீலாம்பூர் பகுதியைத் தாண்டியபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்த வேகத்தில் அதிலிருந்த பயணிகள் நிலைகுலைந்தனர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இருப்பினும், பலத்த காயமடைந்த 3 பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்து காரணமாக நீலாம்பூர் புறவழிச்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நெரிசலைக் குறைக்க, அவ்வழியே வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர், உடனடியாக பீளமேடு காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நீலாம்பூர் காவல்துறையினர், ஓட்டுநரின் கவனக்குறைவு விபத்திற்குக் காரணமா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
