இந்திய தடகள கூட்டமைப்பு முதன்முறையாக அறிமுகப்படுத்திய ‘இந்திய தடகள விருதுகள்’ விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு, 2025-ஆம் ஆண்டின் ‘சிறந்த தடகள வீரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட நீரஜ் சோப்ரா, மூத்த மற்றும் இளம் தலைமுறை தடகள வீரர்களுக்கு முன்னிலையில் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது தனது இதயத்திற்கு மிக நெருக்கமானது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அதேபோல் மகளிர் பிரிவில், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனை படைத்த வீராங்கனை பருல் சவுத்ரி ‘ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனை’ விருதைத் தட்டிச் சென்றார். இவர்களுடன் தடகளத் துறைக்கு ஆற்றிய வாழ்நாள் பங்களிப்பிற்காக, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரும் முன்னாள் தடகள ஜாம்பவானுமான பி.டி. உஷாவுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
சமீபத்தில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பாதிப்புக்குள்ளான நீரஜ் சோப்ரா, துருக்கியில் தீவிர சிகிச்சையும், சுவிட்சர்லாந்தில் பயிற்சிகளையும் மேற்கொண்டு தற்பொழுது மீண்டும் விளையாட்டுத் துறைக்குத் திரும்பியுள்ளார். விருது விழாவுக்கு முந்தைய நாள் நடைபெற்ற தோஹா டைமண்ட் லீக் தொடரில், காயம் முழுமையாகக் குணமடையாத நிலையிலும் 85.69 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.
இந்தத் தொடரின் மூலம், இந்திய தடகள கூட்டமைப்பு நிர்ணயித்திருந்த 82.61 மீட்டர் என்ற தகுதி இலக்கை எளிதாகக் கடந்த நீரஜ் சோப்ரா, வரவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதியையும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். தற்பொழுது அவர் வரும் செப்டம்பர் மாதம் டோக்கியோவில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தீவிரமாகத் தயாராகி வருகிறார்.
