காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பி கிராமத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ்.கே.வி. கல்விக் குழுமத்தின் 120வது ஆண்டு விழா மற்றும் ‘Daughters of Kanchi – The SSKV Story’(பெண்ணின் பெருந்தக்க யாவுள) என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் திமுக அரசின் நிதி நிலையை வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாக தவெக அரசு கூறியுள்ளதை வரவேற்பதாகவும், கடந்த ஆட்சியிலும் மத்திய அரசு கொடுக்கவேண்டிய நிதியை ஒதுக்கியதாகவும் கூறினார்.
சட்டப்பேரவையில் அப்பாவை காணோம் என முதலமைச்சர் விஜய் கூறிய குட்டிக்கதை தொடர்பான கேள்விக்கு “அரசியல் விமர்சனம் சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்? எதிர்க்கட்சியும் பேசட்டும், ஆளும் கட்சியும் பதில் சொல்லட்டும்; அதில் தவறு இல்லை” என்றார்.

மேலும், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும், “கடன் வாங்குவது முக்கியமல்ல; அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம். வசதி இருந்தால் மக்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கலாம்” என்றும் தெரிவித்தார்.
