இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசமைப்புச் சட்டம் தந்த உரிமையின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் சமீபத்திய தீர்ப்பு, தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும் புறக்கணிக்கும் வருத்தமளிக்கும் தீர்ப்பாகும்.
தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாக பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில், சமூக மற்றும் கல்வி அடிப்படையிலான ஆய்வுகளின் அடிப்படையில் தான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று முத்தமிழறிஞர் கலைஞர் 2007ல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு (பிசிஎம்) 3.5% இடஒதுக்கீடு வழங்கினார்.
தமிழ்நாட்டில் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசிஎம்) அந்தஸ்து வழங்கலாம் என்பதை பல தீர்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் கடந்த மார்ச் 9, 2024-ல் வெளியிடப்பட்ட அரசாணையின் உதவியால் தமிழ்நாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்றிதழ் கிடைக்க மு.க.ஸ்டாலின் ஆட்சி வழிவகுத்தது.
மதம் மாறிய பிறகும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசிஎம்) என்ற உரிமை தொடரும் என்று இந்த அரசாணை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் எம் எஸ் ரமேஷ் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த அக்டோபர் 25ல் தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், பிசிஎம் அந்தஸ்து புதியதாக வழங்கப்பட்டது அல்ல; ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சமூகநீதிசார் உரிமை என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், “பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்” என்பது தமிழ்நாடு சட்டம் 45/1994-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகப் பிரிவு என்பதை நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில், இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு 3.5% பிசிஎம் இடஒதுக்கீட்டை செல்லாததாக்கும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் அணுகுமுறை, சமூக உண்மைகளையும் அரசியல் சட்டப் பாதுகாப்புகளையும் மறுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகம் என்பது பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிய சமூகநீதி மண். இங்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறிப்பதற்கான எந்த முயற்சியும் மக்களால் ஏற்கப்படாது…
எனவே, தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உயர்நீதிமன்றத்தின் பெரிய அமர்விற்கு மேல்முறையீடு செய்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாதுகாக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
