பிரிக்க முடியாதது எதுவோ என்றால் அது மனிதனும் சோஷியல் மீடியாவும் என்று சொல்வதற்கு இணங்க, இருவரும் ஆண்ட்ராய்டுகளாலும், ஐபோன்களாலும், இணையங்களாலும் ஒருவரை ஒருவர் கட்டுண்டு கிடக்கிறார்கள்.
அலாரம் அடித்து எழுந்த காலம் மாறி சமூக ஊடகங்களின் அறிவிப்பிலேயே இன்றைய விடியல் என்பது தொடங்குகிறது.
இப்படி மனிதனோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் சமூக ஊடகங்களை நினைவூ கூறும் வகையில் ஜூன் 30ஆம் தேதி உலக சமூக ஊடக தினமாகக் கொண்டாடப் படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மக்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களை இணைப்பதில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், 2010-ஆம் ஆண்டு ‘மோஷோபிள்’ (Moshable) என்ற தொழில்நுட்ப செய்தி நிறுவனம் இந்த நாளைத் தொடங்கியது.
நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்ட இந்த டிஜிட்டல் தளங்களின் தாக்கத்தை சற்றுத் திரும்பிப் பார்ப்பது அவசியம்.
சமூக ஊடகங்கள் என்பது மனிதர்களைப் பொறுத்தவரையில் வெறும் பொழுதுபோக்குக் கருவிகள் மட்டுமல்ல; அவை சமூக மாற்றத்திற்கான மிக வலிமையான ஆயுதங்களாகும்.
ஒரு காலத்தில் ஒரு செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வாரங்கள், மாதங்கள் தேவைப்பட்ட நிலையில், இன்று ஒரு ‘கிளிக்’ மூலம் உலகின் ஒரு முனையில் நடக்கும் நிகழ்வு மறுமுனைக்கு நொடிகளில் சென்றடைகிறது.
தனிமனிதர்கள், வணிகங்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் தங்கள் கருத்துகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக ஊடகங்கள் என்பவை ஒரு ஜனநாயக தளமாக மாறியுள்ளதையும் மறுக்க முடியாது.
உலகத்தை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்ட இந்த தொழில்நுட்ப யுகத்தில், சமூக விழிப்புணர்வு மற்றும் தேர்தல் போன்ற காலங்களில் சமூக ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது.
மனிதனை விடாமல் பின் தொடரும், அல்லது மனிதன் விடாமல் பின் தொடரும் சமூக ஊடகங்கள் என்பவை மாற்றத்துக்கான விதையாகவும் இருந்து வருகிறது.
கொள்கைகளை விளக்குவதற்கும், மக்களின் தேவைகளை உரக்கச் சொல்வதற்கும், குறைகளை அதிகார மையங்களுக்குக் கொண்டு செல்வதற்கும் இவை பாலமாகச் செயல்படுகின்றன.
இப்படி சமூக ஊடகங்கள் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டிருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போது ஒருவிதமான பொறுப்புணர்வு மிக அவசியம்:
காரணம் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் தனக்கு மட்டுமே கிடைத்த அரிய தகவலாகக் கருதி உடனடியாக அதனை பரப்புவதில் காட்டும் ஆர்வத்தை, அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதில் யாரும் காட்டுவதில்லை. பரவும் தகவல்கள் உண்மையானதா என்பதை உறுதி செய்வது படைப்பாளியின் கடமை. வதந்திகளைத் தவிர்த்து, ஆதாரங்களுடன் கூடிய தரவுகளைப் பகிர்வது நம்பிக்கையை வளர்க்கும்.
இன்றைய சமூக ஊடகங்களில் நல்லவற்றைப் பரப்புவதை விட அல்லவற்றை பரப்புவதிலேயே அதிகம் காட்டுவதும், கருத்து வேறுபாடுகளை ஆரோக்கியமான விவாதமாக முன்னெடுக்காமல் தனிநபர் தாக்குதல், வெற்றுப்பு பேச்சு எனக் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து இணையம் வழியே சமூக ஊடகங்களில் இயங்கும்போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, ஆரோக்கியமான முறையில் டிஜிட்டல் இடைவெளியைப் பராமரிப்பது முக்கியம்.
சமூக ஊடகங்கள் ஒரு முனைக் கூர்மை கொண்ட கத்தி போன்றது. அதை எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது. இன்றைய சமூக ஊடக தினத்தில், நாம் பகிரும் ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு காணொளியும் ஒரு மாற்றத்தை நோக்கிய நேர்மறையான பங்களிப்பாக இருக்கட்டும்.
எம்.செய்யது முகம்மது ஆசாத்
