தேசிய மருத்துவர்கள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய 20ம் நூற்றாண்டில் மருத்துவ உலகம் பல்வேறு வகைகளில் முன்னேறி இருக்கிறது. மனித உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்ப புது புது இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. தீர்க்கவே முடியாது என்று இருந்த வியாதிகளுக்கு மருத்துவர்கள் மருந்துகளை தயாரித்து மக்களை காப்பாற்றி வருகின்றனர். அப்படி இருக்க, நாட்டின் முதல் பெண் மருத்துவர் பட்ட கஷ்டங்களை நாம் நினைவு கூர்வது அவசியம்..
1886-ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தவர் முத்துலட்சுமி ரெட்டி. புதுக்கோட்டை அரசர் கல்லூரித் தலைவராக இருந்த நாராயணசாமி ஐயர் என்பவரது மகளான இவர், தந்தையின் வழிகாட்டுதல் படி, ஆடவர் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார். அப்போதெல்லாம் பெண்கள் வீட்டின் அடுப்பங்கறையில் மட்டும் இருந்தால் போதும் என்ற காலகட்டம். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் பிறந்தாலே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் அளவிற்கு இருந்தனர் மக்கள்.
அப்படியிருக்க, அந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கூடம் ஏறி படித்தார் முத்துலட்சுமி. 6-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற முத்துலட்சுமியின் திறமையை கண்டு வியந்த தந்தை, மேற்படிப்பிற்கு செல்லவிடவில்லை. ஆசிரியரின் தீவிர முயற்சியால் 8ம் வகுப்பு சென்றவர், பருவமடைய மீண்டும் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்தது.
தந்தையிடமும், ஆசிரியரிடமும் வீட்டிலிருந்தே பாடம் கற்றவர், இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்த்தார். பலக்கட்ட முயற்சிகளுக்கு பிறகு ஆடவர் கல்லூரியில் ஒரு திரைக்கு அந்தப்புறம் அமர்ந்து தனி ஒரு பெண்ணாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கல்லூரி படிப்பை தொடர்ந்தார். தாயின் தீரா நோயே, தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மத்தியில் ஏற்படுத்தியது.
அதன்படி 1907ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரி வரலாற்றிலேயே எம்.பி & சி.எம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதல் தமிழ்ப் பெண்மணி, பல்கலைகழகத்திலேயே முதல் பட்டதாரியாகவும், இந்தியாவிலேயே முதல் மருத்துப் பெண் பட்டதாரியாகவும் தேர்ச்சி பெற்றார் முத்துலட்சுமி. பிறகு தனது மருத்துவ பணியை செம்மையாக செய்தார் முத்துலட்சுமி. தேசிய மருத்துவத் தினத்தில் நாட்டின் முதல் பெண் மருத்துவரை நாம் எப்போதும் நினைவு கூர்வோம்.
