2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் தனது முதல் ஆதரவை அளித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் ஆதரவுக் கரம் நீட்டியது.
தங்களுக்கு ஆதரவளித்த காங்கிரஸ், ஐயூஎம் எல், விசிகவுக்கு அமைச்சர் பதவியையும் அளித்து தவெக அழகு பார்த்துள்ளது.
தற்போது மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் இன்று தவெகவுடன் உள்ளது. இதேபோல் அதிமுகவில் இருந்து 6 எம்.எல்.ஏக்கள் வெளியேறி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தனக்கு ஆதரவளிக்கும் கட்சிகளை இணைத்து, புதிய பெயருடன் கூடிய மதச்சார்பற்ற சமூக நீதிக் கூட்டணியை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இன்று மாலை கோவளம் அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஆட்சியில் பங்கேற்கும் கட்சிகள் பங்கேற்கின்றன. ஆனால், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்து, கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் தனியாக முதல்வர் விஜயை தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்தனர். அப்போது தொழிலாளர், விவசாயப் பிரச்சினைகள் தொடர்பாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
