சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை நேரடியாக ஜிப்மர் மருத்துவமனைக்குள் செலுத்தி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனத்தைச் சேர்ந்த 30 வயதான ஐஸ்வர்யா என்ற பெண், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்து கோரிமேடு பகுதியை நெருங்கியபோது, ஐஸ்வர்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சூழ்நிலையின் அவசரத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு, பேருந்தை நேரடியாக கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திற்குள் இயக்கி, அவசர சிகிச்சைப் பிரிவு முன்பு நிறுத்தினார்.
பின்னர், பயணிகள் உதவியுடன் ஐஸ்வர்யாவை உடனடியாக பேருந்தில் இருந்து இறக்கி, ஜிப்மர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்ததால் அவரது உடல்நிலை சீரடைந்தது. உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்ட தமிழக அரசு பேருந்து ஓட்டுநரின் மனிதநேயமும், தன்னலமற்ற சேவையும் ஒரு பயணியின் உயிரைக் காப்பாற்றியதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பேருந்து ஓட்டுநருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
