உலகின் மிகப் பெரிய மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பயனர்களின் மொபைல் எண்ணை வெளிப்படுத்தாமல் தொடர்புகொள்ளும் வகையில் “Username” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
ஆனால், இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, அதனைத் தற்காலிகமாக நிறுத்துமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப்புக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், தனியுரிமை மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த விவாதம் தீவிரமாகி உள்ளது.
இதுவரை வாட்ஸ்அப்பில் ஒருவரை தொடர்புகொள்ள அவரது மொபைல் எண் கட்டாயமாக இருந்தது. ஆனால், புதிய வசதியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட Username ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும். இதனால் மொபைல் எண்ணை பகிர வேண்டிய அவசியம் இருக்காது.
இருப்பினும், கணக்கை உருவாக்க மொபைல் எண் தொடர்ந்து அவசியமாகவே இருக்கும். ஆனால், மற்றவர்களுடன் உரையாடும்போது அந்த எண் மறைக்கப்படும்.
இந்திய அரசின் கவலை என்ன?
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக “டிஜிட்டல் அரெஸ்ட்”, வங்கி மோசடி, போலி காவல்துறை அதிகாரி, போலி அரசு அதிகாரி என ஏமாற்றும் சைபர் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், ”மொபைல் எண்ணுக்குப் பதிலாக Username வந்தால்,அரசு அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கலாம்.வங்கிகள், RBI, CBI, போலீஸ் போன்ற பெயர்களைப் போன்ற Username-களை பயன்படுத்தி ஏமாற்றலாம். மோசடி செய்பவர்களின் உண்மையான அடையாளத்தை கண்டறிவது சிக்கலாகும்” என்பதே மத்திய அரசின் முக்கிய அச்சமாக உள்ளது.
வாட்ஸ்அப் என்ன சொல்கிறது?
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை வாட்ஸ்அப் மறுக்கிறது. அந்நிறுவனத்தின் விளக்கப்படி, Username-களை பொதுவாக தேட முடியாது. Public Directory இருக்காது. சரியான Username தெரிந்தால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். Username Key என்ற கூடுதல் பாதுகாப்பு வசதியும் வழங்கப்படும்.

பிரபலங்கள், அரசு அமைப்புகள், வங்கிகள் போன்றவற்றின் பெயர்கள் முன்கூட்டியே பாதுகாக்கப்படும். புதிய கணக்கு, வெளிநாட்டு கணக்கு போன்ற எச்சரிக்கை தகவல்களும் முதல் செய்தியிலேயே காட்டப்படும்.எனவே இது சமூக வலைதள வசதி அல்ல; தனியுரிமையை பாதுகாக்கும் Privacy Feature என வாட்ஸ்அப் விளக்கமளிக்கிறது.
நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?
சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து இரண்டு வகையாக உள்ளது. ஒரு தரப்பு, மொபைல் எண் என்பது இந்தியாவில் அடையாளத்தின் முக்கிய சான்று என்பதால், அதை மறைப்பது மோசடிகளை அதிகரிக்கலாம் என எச்சரிக்கிறது. மற்றொரு தரப்பு, குறிப்பாக பெண்கள், மாணவர்கள், சமூக அமைப்புகளில் செயல்படுபவர்கள் போன்றோருக்கு தங்கள் மொபைல் எண்ணை பகிராமல் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைப்பது முக்கியமான தனியுரிமை முன்னேற்றம் எனக் கருதுகிறது.
மோசடிக்காரர்களுக்கு புதிய ஆயுதமா?
உலகிலேயே அதிக வாட்ஸ்அப் பயனர்கள் உள்ள நாடு இந்தியா. 50 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். எனவே இந்திய அரசு எடுக்கும் முடிவு, இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளாவிய வாட்ஸ்அப் கொள்கைகளையும் பாதிக்கக்கூடியதாக இருக்கும். இந்த நிலையில், வாட்ஸ்அப்பின் இந்த Username வசதி உண்மையில் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் புதிய முயற்சியா அல்லது சைபர் மோசடிக்காரர்களுக்கு புதிய ஆயுதமாக மாறுமா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.
இதற்கான பதில், வாட்ஸ்அப் வழங்கும் பாதுகாப்பு அம்சங்கள் நடைமுறையில் எவ்வளவு திறம்பட செயல்படுகின்றன என்பதையும், இந்திய அரசு விதிக்கும் பாதுகாப்பு நிபந்தனைகள் என்ன என்பதையும் பொறுத்தே அமையும்.
தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தனியுரிமையும் அவசியம். அதே நேரத்தில், சைபர் பாதுகாப்பும் அதே அளவு முக்கியம். இந்த இரண்டுக்கும் இடையே சமநிலையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதே தற்போது இந்தியா மற்றும் வாட்ஸ்அப் முன் நிற்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
-பா. முகிலன்
